திருவானைக்கா
Вставка
- Опубліковано 20 вер 2024
- !!அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக !!
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் திருமுறை
திருவானைக்கா
பாடல் எண் : 1
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.
பொழிப்புரை :
தெளிவற்றசிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !
குறிப்புரை :
கோனை - எல்லா உலகிற்கும் தலைவனாகிய பெருமானை . காவி - காப்பாற்றி . குளிர்ந்தமனத்தராய் - மனங் குளிர்ந்தவராய் . தேனை - அப்பெருமானது திருவருளமுதாகிய தேனை . காவி - விரும்பிக் காத்து . உண்ணார் - உண்ணாதவராயினார் . தெண்ணர்கள் - தெளிந்த அறிவில்லாதவர்கள் . ஆனைக்காவில் எம் அண்ணலை - திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய எங்கள் தலைவனை . அணைகிலார் - சென்று தரிசிக்காதவராய் . ஊனை - இவ்வுடலையே . காவி - ஓம்பி . உழிதர்வர் - திரிவர் . ஊமர் - ஊமையர் . வாய்பெற்ற பயனை வாழ்த்திப் பெறாதவராதலால் வாயிருந்தும் ஊமையர் என்றார் .
பண் :
பாடல் எண் : 2
திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு , அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன் .
குறிப்புரை :
திருகு - மாறுபட்ட . தீர்த்து - மாறுபாடொழித்து . செம்மை செய்து - தூய்மை செய்து . ஊறல் - உள்ளத்துள்ளே ஊறும் தேன் போன்ற சிவாநந்தானுபவம் . ` கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் ` ( தி .6. ப . 87. பா .1) பற்றிப்பதமறிந்து பருகி - அன்பால் பணிந்து அப்பெருமானின் திருவருளமுதைச் செவ்வியறிந்து உண்டு . உருகிநைபவர் - மனமுருகி திருவருட் பேற்றிற்கு இளைப்பவர் . ஊனம் - குறை . அருகு - அண்மையில் . நின்றிடும் - எழுந்தருளுவான் .
பண் :
பாடல் எண் : 3
துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
என் பொன்போல்வான் என்றும் , ஈசன் என்றும் , இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால் , துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின் , இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக .
பாடல் எண் : 4
நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பாடல் எண் : 5
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக ; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக ; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் ` அஞ்சேல் ` என்று அருள்பவன் அப் பெருமானேயாவன் .
பாடல் எண் : 6
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல் , படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன் .
பாடல் எண் : 7
ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .
பாடல் எண் : 8
உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே ! தெளிவடைவீர்களாக ; தீவினையைச் சேராமல் விரைந்து , இருள் அறுத்து நின்று ` ஈசனே ` என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .
பாடல் எண் : 9
நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக .
பாடல் எண் : 10
ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே.
பொழிப்புரை :
ஆனைக்காவின் அண்ணல் , அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர் .
அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!
www.thevaaram.org
அருமை ஐயா அருமை
அருமையான முறையில் இசையமைத்து பாடியதற்கு மிக்க நன்றி...
🙏🙏🙏 சிவாய நம🙏🙏🙏🙏🙏
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌷🥀
இந்த மாதிரி பதிகம் போடவும் நன்றிகள் கோடி