திருவானைக்கா

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • !!அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக !!
    திருச்சிற்றம்பலம்
    ஐந்தாம் திருமுறை
    திருவானைக்கா
    பாடல் எண் : 1
    கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
    தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
    ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
    ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.
    பொழிப்புரை :
    தெளிவற்றசிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !
    குறிப்புரை :
    கோனை - எல்லா உலகிற்கும் தலைவனாகிய பெருமானை . காவி - காப்பாற்றி . குளிர்ந்தமனத்தராய் - மனங் குளிர்ந்தவராய் . தேனை - அப்பெருமானது திருவருளமுதாகிய தேனை . காவி - விரும்பிக் காத்து . உண்ணார் - உண்ணாதவராயினார் . தெண்ணர்கள் - தெளிந்த அறிவில்லாதவர்கள் . ஆனைக்காவில் எம் அண்ணலை - திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய எங்கள் தலைவனை . அணைகிலார் - சென்று தரிசிக்காதவராய் . ஊனை - இவ்வுடலையே . காவி - ஓம்பி . உழிதர்வர் - திரிவர் . ஊமர் - ஊமையர் . வாய்பெற்ற பயனை வாழ்த்திப் பெறாதவராதலால் வாயிருந்தும் ஊமையர் என்றார் .
    பண் :
    பாடல் எண் : 2
    திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
    பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
    துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
    அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு , அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன் .
    குறிப்புரை :
    திருகு - மாறுபட்ட . தீர்த்து - மாறுபாடொழித்து . செம்மை செய்து - தூய்மை செய்து . ஊறல் - உள்ளத்துள்ளே ஊறும் தேன் போன்ற சிவாநந்தானுபவம் . ` கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் ` ( தி .6. ப . 87. பா .1) பற்றிப்பதமறிந்து பருகி - அன்பால் பணிந்து அப்பெருமானின் திருவருளமுதைச் செவ்வியறிந்து உண்டு . உருகிநைபவர் - மனமுருகி திருவருட் பேற்றிற்கு இளைப்பவர் . ஊனம் - குறை . அருகு - அண்மையில் . நின்றிடும் - எழுந்தருளுவான் .
    பண் :
    பாடல் எண் : 3
    துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
    இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
    என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
    கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    என் பொன்போல்வான் என்றும் , ஈசன் என்றும் , இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால் , துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின் , இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக .
    பாடல் எண் : 4
    நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
    ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
    காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
    ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே.
    பாடல் எண் : 5
    வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
    வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
    நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
    அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக ; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக ; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் ` அஞ்சேல் ` என்று அருள்பவன் அப் பெருமானேயாவன் .
    பாடல் எண் : 6
    நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
    படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
    தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
    அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல் , படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன் .
    பாடல் எண் : 7
    ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
    கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
    தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
    றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .
    பாடல் எண் : 8
    உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
    தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
    இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
    அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே ! தெளிவடைவீர்களாக ; தீவினையைச் சேராமல் விரைந்து , இருள் அறுத்து நின்று ` ஈசனே ` என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .
    பாடல் எண் : 9
    நேச மாகி நினைமட நெஞ்சமே
    நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
    பாச மற்றுப் பராபர வானந்த
    ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக .
    பாடல் எண் : 10
    ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
    கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
    பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
    ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே.
    பொழிப்புரை :
    ஆனைக்காவின் அண்ணல் , அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர் .
    அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!
    www.thevaaram.org

КОМЕНТАРІ • 5

  • @annapooranik1967
    @annapooranik1967 2 роки тому

    அருமை ஐயா அருமை

  • @gokulakrishnan430
    @gokulakrishnan430 Рік тому

    அருமையான முறையில் இசையமைத்து பாடியதற்கு மிக்க நன்றி...

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 2 роки тому

    🙏🙏🙏 சிவாய நம🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌷🥀

  • @licilangovan5502
    @licilangovan5502 Рік тому

    இந்த மாதிரி பதிகம் போடவும் நன்றிகள் கோடி